Pages

Subscribe:

Monday, November 5, 2012

குர்ஆனில் கணிதத் தவறுகள் இருக்கிறதா?

இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:
 
கேள்வி எண்: 34
 
பிரபல பத்திரிக்கையாளர் அருண்சூரியின் கருத்துப்படி குர்ஆனில் தவறான கணக்கு வகைகள் இருக்கின்றன. குர்ஆனில் உள்ள நான்காவது அத்தியாத்தின் 11ஆம் மற்றும் 12 ஆம் வசனத்தின்படி வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுத்தால் – பிரித்துக் கொடுக்கப்படக் கூடிய சொத்து ஒன்றுக்கும் மேற்பட்டதாக வருகிறது. எனவே குர்ஆனை அருளியவருக்கு கணக்குத் தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

 
பதில்:
 
வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின் கீழ் குறிப்பிட்டுள்ள வசனங்கள் குறிப்பிடுகின்றன:
 
அத்தியாயம் இரண்டு ஸுரத்துல் பகராவின் 180 வது வசனம்

அத்தியாயம் இரண்டு ஸுரத்துல் பகராவின் 240 வது வசனம்

அத்தியாயம் நான்கு ஸுரத்துல் நிஷாவின் 7வது வசனம் முதல் 9வது வசனம் வரை

அத்தியாயம் நான்கு ஸுரத்துல் நிஷாவின் 19வது வசனமும் 33வது வசனமும்
அத்தியாயம் ஐந்து ஸுரத்துல் மாயிதாவின் 105வது வசனமும் 108வது வசனமும்.
 
வாரிசுதாரர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 11வது வசனமும், 12வது வசனமும், 176வது வசனமும் மிகத் தெளிவான விளக்கம் அளிக்கின்றன.
 
பத்திரிக்கையாளர் அருண்சூரி குறிப்பிடும் அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 11வது வசனத்தையும், 12வது வசனத்தையும் நாம் இப்போது ஆய்வு செய்வோம்.
 
‘உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்: பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும், இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்): இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்குச் சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான்: உங்கள் பெற்றோர்களும் குழந்தைகளும் இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள்: ஆகையினால் (இந்த பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளiயாகும்: நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்.’
 
‘இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு: அவர்களுக்குப் பிள்ளை இருந் தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் – (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான் – தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம் தான், உங்களுக்குப் பிள்ளை இருந்தால் அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் தான்: (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே தான்: தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை பேரன் போன்ற பின்வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ இருந்தால் – அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு, ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்: ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்)எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது, (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும, மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்… (அல்-குர்ஆன் 4வது அத்தியாயம் ஸ}ரத்துன் னிஷாவின் 11 மற்றும் 12 வது வசனங்கள்).’
 
வரிசுகளுக்கு சொத்துக்களை பங்கிட்டுக் கொடுப்பது பற்றி இஸ்லாம் மிகவும் விரிவாக தெரிவிக்கின்றது. வரிசுகளுக்கு சொத்துக்களை பங்கிட்டுக் கொடுப்பது பற்றிய முக்கிய பகுதியை மாத்திரம் அருள்மறை குர்ஆன் சொல்கிறது. அருள்மறை குர்ஆன் சொன்ன முக்கிய பகுதியின் விளக்கங்களை நாம் ஹதீஸ்களில் – அதாவது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
 
இஸ்லாம் வாரிசுகளுக்கு சொத்துக்களைப் பங்கிட்டு வழங்குவது பற்றிய சட்டங்களின் முழு விபரங்களையும் நாம் ஆய்வு செய்ய முயன்றோம் எனில் – ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்து – ஆய்வு செய்யக் கூடிய அளவிற்கு உண்டான செய்திகள் அதில் இருக்கின்றன. இஸ்லாம் வாரிசுகளுக்கு சொத்துக்களைப் பங்கிட்டு வழங்குவது பற்றிய சட்டத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்து கொள்ள விரும்பாத பத்திரிக்கையாளர் அருண்சூரி, அருள்மறை குர்ஆனின் இரண்டு வசனங்களை மேலெழுந்தவாரியாக படித்துவிட்டு, அதன் முழு சட்டத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்.
 
மேலே குறிப்பிடபட்டவரின் முயற்சியானது – கணிதவியலின் அடிப்படைத் தத்துவத்தை அறியாத ஒருவர், பின்னக் கணக்குகளை சரிசெய்ய முயற்சி செய்வது போன்றதாகும். கணிதவியலின் அடிப்படை தத்தவம் ‘BODMAS’ என்பதாகும். ஒரு பின்னக் கணக்கை முறைப்படி சரி செய்ய, பின்னக் கணக்கில் – எந்த கணக்குக்குறி முதலில் வந்தாலும் – கணிதவியலின் அடிப்படை தத்துவம் ‘BODMAS’ முறையில்தான் பின்னக் கணக்கை சரி செய்ய வேண்டும்.
 
1. BRACKETS OFF – அடைப்புக் குறிகள் நீக்கப்படுதல்
2. DIVISION – வகுத்தல்
3. MULTIFICATION – பெருக்கல்
4. ADDITION – கூட்டல்
5. SUBTRACTION – கழித்தல்.
 
அருண்சூரி பின்னக் கணக்கின் அடிப்படை தத்துவம் ‘BODMAS’ பற்றி அறியாதவராக இருப்பதால் – முதலில் பெருக்கலையும் – இரண்டாவதாக கழித்தலையும் – மூன்றாவதாக அடைப்புக் குறிகளை நீக்குதலையும் – நான்காவதாக வகுத்தலையும் – கடைசியில் கூட்டலையும் செய்திருக்கிறார். எனவே அவருக்கு கிடைக்கும் விடை நிச்சயமாக தவறானதாகத்தான் இருக்கும்.
 
அருள்மறை குர்ஆன் வாரிசுகளுக்கு சொத்துக்களை பங்கிட்டு வழங்குதல் பற்றிய வசனங்களில் (Al –Quran 4: 11, 12) முதலில் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய பங்கு, பின்னர் பெற்றோருக்கு கிடைக்க வேண்டிய பங்கு மற்றும் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ (SPOUSE) கிடைக்க வேண்டிய பங்குகளை பற்றி தெரிவித்தாலும், இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டப்படி – முதலில் கொடுக்க வேண்டிய கடன்கள் கொடுக்கப்பட வேண்டும். பின்னர் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ (SPOUSE) கொடுக்கப்பட வேண்டிய பங்குகளும் – பெற்றோருக்கு கொடுக்கப்பட வேண்டிய பங்குகளும் கொடுக்கப்பட வேண்டும். மேற்படி பங்கீடு – இறந்தவர் பிள்ளைகள் உள்ளவரா? – இல்லையா? என்பதையும், அவரிடம் மேலே குறிப்பிடப்பட்ட வகையில் சொத்துக்களை பங்கீடு செய்த பின்பு, மேலும் சொத்துக்கள் எஞ்சியிருக்கிறதா என்பதையும் பொருத்தது. மேலும் எஞ்சியிருக்கும் சொத்துக்கள் அவரது ஆண் வாரிசுகளுக்கும் – பெண் வாரிசுகளுக்கும் உரிய முறைப்படி பங்கீடு செய்யப்பட வேண்டும்.
 
மேற்படி இஸ்லாமிய முறையில் சொத்துக்கள் பங்கீடு செய்யப்படும் பொழுது தவறுகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. கணிதவியல் தெரியாதவன் அல்லாஹ் அல்ல. கணிதவியல் அறியாதவர் பத்திரிக்கையாளர் அருண்சூரிதான்.
 
மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்
ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா
 

0 comments: